INDIAN FARMS

-------------------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாய் வளர்ப்பு:

கொரோனா காலத்துக்குப் பிறகு செல்லப்பிராணிகளை வளர்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. லாக் டவுனில் போரடித்த நாட்களை அழகாக்கியது செல்லப் பிராணிகளே. அதில் நாய்களுக்கே முதல் இடம். தற்போது நாய்களை வளர்க்க அதிகம் பேர் ஆர்வம்காட்டி வருகின்றனர். இதனால், நாய்களை எப்படி வாங்குவது? பராமரிப்பது? ஆரோக்கியமாக வைத்திருப்பது? உணவு முறையைத் தெரிந்து கொள்வது போன்ற நிறையக் கேள்விகளுக்கானப் பதிவே இது. எல்லா நாய்களும் காவல் காக்காது. குழந்தைகளுடன் விளையாட ஒரு வகை. காவல் காக்க இன்னொரு வகை. குழந்தைகளைப் பாதுகாக்க மற்றொரு வகை. குழந்தையில்லாதோருக்கு தான் குழந்தையாகவே இருக்க ஒரு வகை எனப் பல்வேறு வகைகள் நாய் இனங்களில் உண்டு. ஒவ்வொரு நாயின் குணமும் வெவ்வேறு மாதிரி, அதன் இனம், வகைப் பொறுத்து மாறுப்படும்.

நாய்க்குட்டி வாங்கும் முன் கவனிக்க:

வழக்கத்திற்கு மாறாகப் பெரிய வயிற்றுப் பகுதியுடன் காணப்படும் நாய்க்குட்டிகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். ரத்தச்சோகை அறிகுறிகள் இல்லாத நாய்களை வாங்கலாம் . குறைந்தது 6 வாரங்களாவது தாயுடன் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டிகளை வாங்குவதே சிறந்தது. பிறக்கும் குட்டிகளில் முதலில் பிறந்தவற்றை வாங்குவதே சிறந்தது.



வளர்க்க குட்டியா / பெரிய நாயா?்:

வளர்ந்த நாய்களை வளர்க்க ஆசைப்படுவதைவிடக் குட்டிகளாக இருக்கின்றவற்றை வளர்ப்பது சுலபம். நல்ல ஒழுக்கங்களையும் சொல்லி தர முடியும். சிறுநீர், மலம் கழித்தல் டிரெயினிங் முதல் என்னென்ன செய்யணும் செய்ய கூடாது என்று சில விதிமுறைகளை டிரெயினிங் கொடுப்பது சுலபம். முதலில் நீங்கள் வளர்க்கும் நாய் எந்த வகை? இது எந்த மாதிரியான குணாதிசியங்கள் கொண்டது எனத் தெரிந்த பிறகு அந்த நாய் வகையை தேர்வு செய்து வளர்ப்பது சிறந்த முறை. நாயின் வகைத் தெரியாமல், அதன் குணங்கள் தெரியாமல் வளர்ப்பது சற்றுக் கடினமாக இருக்கும். ஏனெனில் எல்லா நாய்களும் காவல் காக்காது. சில நாய் வகைகள் மட்டுமே காவல் வேலையைச் செய்யும்.

நாய்க்கான உணவுமுறை:

சமைக்கப்படாத மாமிசத்தை நாய்கள் விரும்பி சாப்பிட்டாலும் கூட, உண்ணிப் பிரச்சனை, புழுக்கள், நச்சுப் பொருள், நுண்ணுயிரி, நச்சுயிரி ஆகியவற்றின் காரணமாகச் சமைத்த மாமிசத்தைக் கொடுப்பதே நல்லது. இதுபோலப் பச்சை முட்டையில் காணப்படும் அவிடின் என்சைமின் செயலினால் சத்துக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவித்த முட்டைகளை அளிக்க வேண்டும். முள் நீக்கப்பட்ட மீன்களை கூட கொடுக்கலாம். ஒரே மாதிரியான உணவுகளை அனைத்து நாட்களுக்கும் கொடுக்காமல் இடை இடையே மாற்றிக் கொடுக்க வேண்டும். திடீரென மாற்றங்கள் செய்யாமல், படிப்படியாக மாற்றம் செய்யலாம். சைவ உணவுகளை மட்டுமே கொடுத்து வளர்க்க நினைப்போர் கால்நடை மருத்துவரை அணுகி தாது உப்புகள், விட்டமின் சத்துகளைக் கூடுதலாகக் கொடுக்கலாம்.



டாய்லெட் பழக்கங்கள்:

ஒரு நாய் குட்டி புதிய இடத்துக்கு வந்தால் அதற்குச் சிறுநீர், மலம் எங்குக் கழிக்க வேண்டும் எனச் சொல்லி தருதல் அவசியம். நாய்க்குட்டிகள் பெரும்பாலும் திரவ உணவு சாப்பிடுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும். இதை உணர்ந்து ஒவ்வொரு ஒரிரு மணி நேரத்துக்கு ஒரு முறை அதனை அந்த இடத்துக்குக் கூட்டி சென்று பழக்கப்படுத்தலாம். உணவு அருந்திய பிறகு, விளையாட முனையும்போது, எசமானின் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கும் போது, உணர்ச்சி வசப்படும்போது, பயப்படும்போது எனப் பல்வேறு சமயங்களில் சிறுநீர் கழிக்கும்.

குடிநீர் ஆல் டைம்:

நாய்க்கு எப்போதும் குடிநீர் இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும். போதிய அளவு சுத்தமான குடிநீரை கொடுப்பது மிக அவசியம். நாய் இருக்கும் இடத்தருகில் தண்ணீரை வைப்பதும் நல்லது. குடிநீர் வைக்கும் பாத்திரத்தை நன்கு சுத்தம் செய்யப்பட வேண்டும். சுத்தமில்லாத பாத்திரங்களை வைக்கக் கூடாது.



டிரெயினிங் எப்போது:

நாய்க்கு டிரெயினிங் தர விரும்புவோர் 4 மாத வயதில் பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். குறிப்பாக 4-9 மாதங்களுக்குள் அனைத்து டிரெயினிங்களையும் சொல்லி முடித்திருக்க வேண்டும். உடல் வளர்ச்சி முடிவற்ற நிலையில் புதிதாக டிரெயினிங் கொடுத்தால் நாய்களை வழிக்குத்துக்கொண்டு வருவது சிரமம். சாதாரணமாக உட்காருதல், நிற்பது, தரையில் படுப்பது, வாக்கிங் வர செய்வது, முட்டியிடுதல், முரண்டு பிடிக்காமல் இருத்தல் போன்ற பணிவுகளைக் குட்டியாக இருக்கும்போதே சொல்லிக் கொடுத்தால்தான் நாய்களுக்குப் புரியும். முழுமையாக வளர்ச்சியடைந்த நாய்க்கு இவற்றைப் பழக்குவது சற்றுக் கடினம். வெளியாட்கள் வீட்டுக்கு வந்தால் குரைப்பது, இரண்டு ஆண் நாய்கள் சண்டையிடுவது, கதவு ஜன்னல் மரக்கட்டைகளைக் கடித்து வைப்பது சுரண்டுவது, குடும்பத்தில் மற்றவர்கள் சாப்பிடும்போது தனக்கும் வேண்டும் என அடம் பிடிப்பது … இது போன்ற பல செயல்கள் நாய் வளர்ப்பவருக்குப் பிடிக்கவும் செய்யலாம் பிடிக்காமலும் போகலாம். இதில் எதெல்லாம் செய்யலாம் செய்யகூடாது என நாய்க்கு சொல்லி தர நாய்களும் கற்றுக்கொள்ளும். பெண் நாய்கள் குட்டியிட வேண்டுமெனில் மண்ணைத் தோண்டும் அதை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம். குட்டியிட போகிறது என்று அதற்கான வசதியை ஏற்படுத்தித் தரலாம்.



நாயின் சில விரும்பத்தகாத குணங்கள்:

நாய்களுக்குள் இருக்கின்ற சில விரும்பத்தகாத குணங்கள் உண்டு. அவை பயமுறுத்துவது, மண்ணைத் தோண்டுவது, வீட்டிலேயே மலம்/சிறுநீர் கழிப்பது, தன் மலத்தைத் தானே தின்பது, அர்த்தமின்றிக் குறைப்பது, எதாவது ஒரு பொருளை கடித்து மெல்வது, நாய்களோடு சண்டையிடுவது, தான் ஈன்ற குட்டிகளைத் தானே கடித்துத் தின்பது, ஊளையிடுவது, மனிதர்கள் மீது தாவி இனப்பெருக்கத்தில் தோதான உடலசைவுகளை மேற்கொள்ளுதல் போன்றவை. தன்னுடைய ஒழுங்கீனமான பல குணங்களை வெளிப்படுத்தினால் அதனை அறிந்து அந்தக் குணத்தை நீக்க எசமானர் முயற்சி செய்ய வேண்டும். அல்லது கால்நடை மருத்துவரிடம் காண்பித்து உதவியை நாடுவது மிக அவசியம். நாய்கள், மனிதர்களுடன் ஒன்றி வாழ்வதால், மனிதர்களுக்குரிய பல்வேறு ஆசாபாசங்கள் நாய்களைப் பாதிக்கின்றன. உதாரணமாகத் தன்னோடு பாசத்தைப் பகிர்ந்துக்கொள்ளும் எசமானரின் பிரிவு மற்றும் தனக்குப் பிடிக்காத நடவடிக்கைகளால் நாய்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே, இவற்றை நாய் வளர்ப்பவர்கள் முன்னரே தெரிந்திருக்க வேண்டும். சில நாய்கள் பூனையின் மலத்தையோ அல்லது தனது மலத்தையோ உண்ணும் பழக்கம் பல சமயங்களில் காணப்படும். பொதுவாகப் பால் கொடுக்கும் பெண் நாய்கள் தங்களது குட்டிகளின் மலத்தினைக் குறிப்பாக பிறந்த நாள் முதல் 3 வார வரையிலும் உண்ணுவது பொதுவாகக் காணப்படும் பிரச்சனை. இதை coprophagy என்பார்கள். நாயை கால்நடை மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. நாய்கள் மலம் கழித்த உடனேயே அந்த இடத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். கால்நடை மருத்துவரை அணுகி செரிமானத்துக்குரிய டானிக்குகளை இப்பிரச்சனையில் உள்ள நாய்களுக்குக் கொடுக்கலாம். மலம் கழிக்கும் இடத்தைச் சுத்தம் செய்ய உங்களுக்குத் தாமதமானால் உடனே அந்த மலத்தின் மீது வேப்ப எண்ணெயை ஊற்றி விடலாம். இந்த வேப்ப எண்ணெயின் நாற்றத்தால் நாய் தன் மலத்தின் அருகில் செல்லாமல் தடுக்கப்படும்.



குளியல் முறை:

எத்தனை நாளைக்கு ஒருமுறை நாயை குளிப்பாட்ட வேண்டுமென்று கணக்குப்போடுவதைவிட நாயின் இனம், வெளிப்புற தட்ப வெட்ப நிலை, பருவ காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். நாயை தினமும் குளிப்பாட்ட கூடாது. சாதாரணமாக, இரு வாரத்துக்கு ஒருமுறை குளிப்பாட்டலாம். கோடை காலத்தில் வாரம் ஒரு முறை. குளிர் காலங்களில் 2-3 வாரங்களுக்கு ஒரு முறை குளிக்க வைக்கலாம். குளிர் காலத்தில் மதிய நேரத்தில் வெது வெதுப்பான தண்ணீரால் குளிப்பாட்டுதல் நல்லது.



நாயை ரயிலில் எடுத்து செல்வோர்:

நாயை டிரெயினில் எடுத்து செல்ல விரும்புவோர், நீங்கள் முதல் வகுப்பு அல்லது குளிர் வசதியுள்ள முதல் வகுப்புப் பெட்டியில் 2 படுக்கை வசதியுடன் உள்ள சீட்டு அல்லது 4 படுக்கை வசதி கொண்ட சீட்டைப் பெற்றுக் கொண்டு செல்லலாம். இவற்றுடன் சுமார் 60 கிலோ பொருட்கள் எடைக்குப் பணம் கட்ட வேண்டும். இதைத் தவிர மற்ற சாதாரண ரயில் கம்பார்ட்மென்டில் எடுத்துச் செல்ல முடியாது. செல்லப்பிராணிகளை, பொருட்களை எடுத்து செல்லும் ரயில் பெட்டியில் 30 கிலோ பொருள் எடைக்குச் சமமான பணம் செலுத்திவிட்டு எடுத்துச் செல்லலாம். இவ்வாறு நாய்களை எடுத்துச் செல்வதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட கூண்டுகள், சரக்கு ரயில் மற்றும் பொருள் ரயில் பெட்டிகளில் உள்ளன. இவ்வாறின்றி அனுமதியில்லாமல் ரயிலில் நாய் எடுத்து செல்வோர் மீது 6 மடங்கு அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, ரயிலில் நாய் எடுத்துச் செல்வோர் சரக்கு கட்டண அலுவலகத்தை அணுகி, உரிய அனுமதி பெறலாம்.



நாயை பதிவு செய்தல்:

வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கும் நாய்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் முறையாகப் பதிவு செய்து கொள்ளுதல் நல்லது.



நாய்க்கு இன்சூரன்ஸ்:

நாய்க்கு மனிதரை போலவே நல்ல மரபு சார்ந்த நாய் மற்றும் உயிரின நாய்களையும் இன்சூரன்ஸ் செய்துகொள்ளலாம். சுமார் 2 மாத வயதில் இருந்து 8 வயது வரை அவற்றினை இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். குறைந்த பட்சமான ரூ.200/ முதல் ரூ.10,000/ மதிப்பு வரை இன்சூரன்ஸ் செய்யலாம். அவற்றின் மதிப்பினை கென்னல் கிளப் மூலமோ அல்லது பதிவு பெற்ற கால்நடை மருத்துவர் மூலமோ அறிந்து கொள்ளலாம். கொடிய நச்சுயிரி நோய்களான வெறி நோய், ரத்த கழிச்சல் நோய், டிஸ்டம்பர் மற்றும் வயிற்று அழற்சி போன்ற நோய்களுக்கு உரிய தடுப்பூசி போட்டு மருத்துவச் சான்றிதழுடன் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நாய்களுக்குத் திடீரென மேற்கூறிய நோய்க்காரணமான இறப்பு வந்தால் இழப்பு ஈடு செய்யப்படும். மேலும் குட்டி போடும் காலத்தில் 3வது நபருக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நாயினால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டால், ஈடு செய்ய முடியும். நாய் திருட்டுப் போய் விடுதல், விபத்தால் இறந்து விடுதல், கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போதல் போன்ற காரணங்களுக்கு அதிக பிரிமியத் தொகை கட்டுவதன் மூலம் இழப்பினை ஈடு செய்ய முடியும். சராசரி பிரிமியத் தொகையாக ஆண்டுக்கு மதிப்புத் தொகையில் சுமார் 5% கட்டுவதன் மூலம் இன்சூரன்ஸ் எளிதில் கிடைக்கிறது.



மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com



மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : indianfarm2000@gmail.com



குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது இந்தியன் பார்ம் .காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி



நண்பர்களுடன் பகிரவும் :








Thankyou for visiting www.indian-farm.com

Web Designed & Maintained bywww.indian-farm.com